Tuesday, March 17, 2009

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது !




துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கைதீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.
பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர். அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர். இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன. இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை. எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும். இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும். இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம்.

அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.
நட்புடன்,மு.முகமம்து ரபீக் அஜ்மான்யு ஏ இ

Monday, March 16, 2009

சத்தியமார்க்கம்.

"பருவத்தே பயிர் செய்" என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உலகத்தின் வளர்ச்சிக்கு ஒப்பத் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத முஸ்லிம் சமுதாயம், இன்று தனது கைகளை விட்டுப் போன அல்லது எதிர்கால சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஊடகத் துறையின் சிறப்பைத் தெரியாமல் இருந்ததன் பலனை இன்று உலகளாவிய அளவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களில் உலகில் ஊடகத்தால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்கா! உலகின் கடந்த கால நிகழ்வுகளில் ஊடகம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இன்று உலக மக்களால் முஸ்லிம் சமுதாயம் ஒருவிதப் பயங்கரவாத சமுதாயமாக பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே எனில் அது மிகையாகாது. இதனை இன்று எழுதித் தெரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இது வெளிப்படையான ஒரு விஷயமாகும்.
"ஒரு பொய் திரும்பத் திரும்ப கூறப்படின் அது உண்மையாகும்" என்ற கோயபல்ஸ் தத்துவத்திற்கு மிகப் பெரிய இலக்கணமாக இன்று முஸ்லிம் சமுதாயம் விளங்குகிறது. உலகில் உயர்வு தாழ்விலா சமத்துவமிக்க சமுதாய அமைப்பு நிறுவக் கூடிய சாத்தியக்கூறுள்ள ஒரே வழி இஸ்லாமாக இருக்கையில், அதனைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் இன்று உலக மக்களால் "தீவிரவாதிகளாக", "பயங்கரவாதிகளாகப்" பார்க்கப்படுகிறது எனில் இது போன்ற வேடிக்கையான, நம்ப முடியாத விஷயம் வேறு ஏதாவது இவ்வுலகில் இருக்குமா?முஸ்லிம் சமுதாயத்தின் மீதான இந்த களங்கத்தின் (பொய் குற்றச்சாட்டின்) மூலத்தையும், அதன் காரணங்களையும் ஒருவாறு பரவலாக அனைவரும் அறிந்திருந்தாலும், "அவர்கள் பயங்கரவாதிகள்" என்ற சிந்தனை ஓட்டம் பாமரர்களின் மத்தியில் ஆழமாக விதைக்கப் பட்டதை மாற்றுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய காரியமன்று. எனினும் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் இதில் தான் அடங்கியுள்ளது. தங்கள் மீது வலிந்து திணிக்கப் பட்ட இக்கறையை எவ்வளவு விரைவில் நீக்குகிறார்களோ அவ்வளவு வேகத்தில் இச்சமுதாயம் வளரும். இதற்கு முஸ்லிம் சமுதாயம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களில் தலையாயது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது பாதையை செம்மையாக்குவதாகும். எப்படி கடந்த காலங்களில் சமுதாயத்துக்கு ஏற்படும் எதிர்காலச் சவால்களை கணக்கில் கொண்டு உலகின் வளர்ச்சியில் அதன் நீரோட்டத்தில் கலக்கவில்லையோ அது போல் இனி இருத்தல் சமுதாயத்தின் அழிவிற்கே வழி வகுக்கும். அந்த வகையில் இனி எதிர்காலத்தை நிர்ணயிப்பது எது என ஆராய்ந்தால், அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு அளிக்கும் பதில், அது இணையமாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்று உலகின் அனைத்து காரியங்களும் இணையத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. வர்த்தகத்தில் ஆரம்பித்து மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளி கட்டுப்பாடு என அனைத்தையும் இன்று தனது காலடியில் இணையம் வைத்துள்ளது. தகவல் புரட்சியில் இன்று ஈடு இணையற்ற பங்கினை இணையம் நிர்வகித்துக் கொண்டு வருகிறது. எதிர் காலத்தில் இணையம் இல்லையேல் உலகம் இல்லை என்ற நிலை வரினும் ஆச்சரியப் படுவதற்கில்லை. (இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இணையத்தின் முக்கியத்துவத்தினைக் குறித்து ஒரு சிறந்த கட்டுரையினை வடித்து அதன் இணைப்பை இவ்விடத்தில் தருகிறோம்.)அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையினில் முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பினை முழுமையாகச் செலுத்த முன் வரவேண்டும். எதிர் காலத்தில் அனைத்துக்கும் மேற்கோள் காட்ட இணையத்தை உலகம் பார்க்கும் பொழுது அதிலும் இச்சமுதாயத்தின் மேல் சுமத்தப் பட்ட களங்கமே நிறைந்து நிற்குமானால் அதன் பின் செய்வதறியாது திகைத்துக் கொண்டு எந்த பலனும் இருக்கப் போவதில்லை.எனவே முழுக்க முழுக்க இவ்வொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு இச்சத்திய மார்க்கம் இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை சத்தியமாக எடுத்துரைக்க இது ஒரு சத்தியத் தளமாக இன்ஷா அல்லாஹ் செயல்படும். சமுதாய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு ஏட்டிலே இருப்பதை மட்டும் எடுத்துக் கூறிவிட்டு சென்று விடாமல் இன்று சமுதாயம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நடைமுறைப் படுத்த முடியக் கூடிய தீர்வுகளையும் யாருக்கும் அஞ்சாமல் இத்தளம் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும்.சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணம், சமுதாயத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவர்கள் "தான்" என்ற அகந்தையினாலோ அல்லது எதிரிகளின் சூழ்ச்சிக்குத் தங்களை அறிந்தோ, அறியாமலோ பலியாகி சமுதாயத்தைப் பிளவு படுத்திக் கொண்டே செல்வதாகும். இத்தளம் இவ்விஷயத்திலும் மிகுந்த கவனத்தை செலுத்தி, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறைத் தவறெனச் சுட்டிக்காட்டி தனி மனித துதி, சக சகோதரர்களை இழிவு படுத்துதல், இயக்கவெறி போன்ற சமுதாய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையிடும் தீய செயல்களிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கப் போராடும் இன்ஷா அல்லாஹ்.இது மட்டுமல்லாமல் நவீன உலகில் இஸ்லாத்திற்கெதிராக பின்னப் படும் சதிவலைகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி சமுதாயத்தை விழிப்புணர்வு அடைய வைக்கும். உலகில் நடக்கும் நிகழ்கால நிகழ்வுகளை ஆய்வதிலிருந்து சந்தேகங்களுக்கு இஸ்லாமிய ஒளியில் விளக்கங்கள் அளிப்பது வரை முடிந்த அளவு அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்குத் தகுந்த அடித்தளம் அமைக்கும் படியாக இத்தளம் அமையும் இன்ஷா அல்லாஹ்!

Sunday, March 15, 2009

முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?

எட்டுவயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”அன்னையின் பதில் : “கடவுள் ஆதாம், ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்படியே மனித உலகம் உருவானது”.இரண்டு தினங்களுக்குப் பிறகு அவள் தன் தந்தையிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”தந்தையின் பதில் : “குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்காக இருந்தவர்கள் நாம்”.சிறுமிக்குக் குழப்பம் அதிகரித்தது. ”ஒரே கேள்விக்கு தாயின் பதிலும், தந்தையின் பதிலும் வேறுவேறாக இருக்கிறதே” என்று.அடுத்த நாள் தன் தாயிடம் கேட்டாள் “இது எப்படிச் சாத்தியம்? நீங்கள் ஆதாமும், ஏவாளுமே மனிதன் உருவாகக் காரணம் என்றீர்கள். ஆனால் அப்பா சொன்னார் - குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று. இரண்டில் எது உண்மை”.சுதாரித்துக்கொண்ட தாய் சொன்னாள் -1) “இது மிக எளிது. என் பரம்பரை அதாவது (உன் அம்மாவின் பரம்பரை) வந்த விதம் ஆதாம், ஏவாளின் சந்ததி வாயிலாக உருவானது”2) “உன் தந்தையின் பரம்பரை வந்த விதம் குரங்குகளின் சந்ததி வாயிலாக உருவானது. இரண்டுமே சரிதான்” என்றாள்.இதைக்கேட்ட சிறுமி ‘ஙே’ என விழித்தாள்.நீதி : மட்டம் தட்டியே பழக்கப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

திருப்பூண்டி.,மு.முகமம்து ரபீக்

துயரத்தில் துபாய்…

எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…
“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”
“இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”
“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”
“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”
இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…
உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா ..?என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை…வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…
சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன்"… எனக்கூற இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்…
இன்று அவனுக்கு வேலை இல்லை…
இன்னொருவன் தன் மனைவி தனக்கு வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையே “ ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…
நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.
பீதியில் துபாய்…
உணவகங்களில் கூட்டமில்லை…கடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே வெறிச்சோடிய நிலை…கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்… தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?
பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?
கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா,சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?
சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?
மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?
வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?
எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…
போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்…என்று கை காட்டி விட்டு கிளம்ப முடியுமா…கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?


1950 களில் “கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN” நாகரீகத்திற்கு நிறம்மாறி
“BURJ DUBAI”(புர்ஜ் என்றால் பெருமை)…உலகின் உயர்ந்த கட்டிடம்…!“DUBAI MALL” உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!“BURJ AL ARAB” உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!“PALM ISLAND” ( பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!

என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…? இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?, இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது…
எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC மோகம், PIERRE CARDIN, TED LAPIDS 75% SALE, 10க்கு 10 பத்து அறையில் பன்ணிரண்டு பேர், இவை எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லை…இருந்தாலும்…

எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…
நண்பன் சொன்னது போல், துபாய்க்கு நேந்துக்குங்க(வேண்டிக்குங்க) விரைவில் மாற்றம் வரலாம்.
நட்புடன்,
மு.முகமம்து ரபீக்
அஜ்மான்
யு ஏ இ

Wednesday, March 11, 2009

அதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்!

ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ; மொழியாக்ம்: முயீன்ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு 'ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல" என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன். கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.அதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே 'நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்" - இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார்.அமைச்சரவை ஜித்தாவில் உள்ள "மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்" - இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் - நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ம முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு… கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு… இபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!
நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் - காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து நீர் வரும் வழியைக் காணலாமே என்று! "ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான" பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் 'அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது." பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது - மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.ஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (lab) இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது - அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜமை ஆராய - ஆராய மேலும் பல அதிசிய தன்மைகள் வெளிவந்து - நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும். சுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன். இந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக - அது உருவான காலத்திலிருந்து உள்ளது. அதன் 'குடிக்கத்தக்க தன்மை" ஒவ்வொரு ஆண்டும் உம்ரா - ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; - மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal).. பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் - மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க - நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.
நட்புடன்,
மு.முகமம்து ரபீக்
அஜ்மான்
யு ஏ இ